என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி கொலை"

    • திருமணம் முடிந்ததும் சந்தியாவை அழைத்துக்கொண்டு சூரியபிரகாஷ் வேம்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.
    • காலையில் மணக்கோலத்தில் இருந்த கணவன், பிணமாக கிடந்ததை கண்டு சந்தியா அலறித்துடித்தார்.

    ஆந்திர மாநிலம் அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் வேம்பள்ளியை சேர்ந்தவர் சூரியபிர காஷ் (வயது 41). உள்ளூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.

    மேடபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா. ராயவரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் காதலித்து வந்தனர்.

    இந்த காதலுக்கு சந்தியா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். இந்த திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

    திருமணம் முடிந்ததும் சந்தியாவை அழைத்துக்கொண்டு சூரியபிரகாஷ் வேம்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இதனை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் சந்திரபால், கிரிபாபு ஆகியோர் நள்ளிரவு சூரியபிரகாஷ் வீட்டுக்கு சென்று அவரை தாக்கினார்கள்.

    பின்னர் இருவரும் சேர்ந்து பாறாங்கல்லை தூக்கி சூரியபிரகாசின் தலையில் போட்டனர். இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    காலையில் மணக்கோலத்தில் இருந்த கணவன், பிணமாக கிடந்ததை கண்டு சந்தியா அலறித்துடித்தார். துணி வியாபாரி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் பொதுமக்கள் திரண்டுவந்து, சந்தியாவின் சகோதரர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரபால், கிரிபாபு ஆகியோரை கைது செய்தனர். காதல் திருமணம் செய்த துணி வியாபாரி கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அலமாதியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
    • பலத்த காயமடைந்த முரளி சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் ராஜகோபாலன். இவரது மகன் முரளி (வயது 26). பால் வியாபாரி.

    இவருக்கும் அலமாதி சாந்தி நகர் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த திலீபன் (25) என்பவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று திலீபன் அவரது ஆதரவாளர்கள் 5 பேருடன் எடப்பாளையத்திற்கு சென்று மாடு மேய்த்துக் கொண்டிருந்த முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அலமாதியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த முரளி சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திலீபன் (25), நவீன் (24), தீபன் (41), ஆறுமுகம் (60) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அபிராமபுரத்தில் உள்ள பெரியப்பா பொன்ராஜின் வீட்டுக்கு அற்புதராஜ் சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • பொன்ராஜை, அற்புதராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அற்புத ராஜ், பொன்ராஜை சரமாரியாக வெட்டினார்.

    சென்னை:

    சென்னை அபிராமபுரம் படவட்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். தூத்துக்குடியை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி இருந்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    இவருக்கும் இவரது தம்பி குடும்பத்துக்கும் இடையே தூத்துக்குடியில் உள்ள சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. தம்பி மகனான அற்புதராஜ் சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று அபிராமபுரத்தில் உள்ள பெரியப்பா பொன்ராஜின் வீட்டுக்கு அற்புதராஜ் சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் பொன்ராஜை, அற்புதராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அற்புத ராஜ், பொன்ராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து பொன்ராஜை கொலை செய்து விட்டேன் என்று அற்புத ராஜ் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் இருப்பவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அபிராமபுரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய அற்புதராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கடந்த 3 மாதத்தில் மட்டும் 18 கொலைகள் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரங்கேறியுள்ளது.
    • நகைக்காக, முன் விரோதம், குடும்ப பிரச்சினை, கள்ளக்காதல், சொத்து பிரச்சினை ஆகியவற்றால் தொடர் கொலைகள் நடந்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (வயது 46). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு சாகுல் (வயது 22), தவ்பீக் (15) என 2 மகன்கள் உள்ளனர். சாகுல் பழனி சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். தவ்பீக் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று அதிகாலை சாகுல் வெளியே சென்று விட்ட நிலையில் அப்துல் லத்தீப் மற்றும் அவரது இளைய மகன் வீட்டில் இருந்தனர். அந்த நேரத்தில் மர்ம கும்பல் வீட்டில் புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த அப்துல் லத்தீப்பை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    மேலும் இதை தடுக்க வந்த தவ்பீக்கிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்துல் லத்தீப்பையும், தவ்பீக்கையும் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அப்துல் லத்தீப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்துல் லத்தீப் முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து வியாபாரியை வெட்டி கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 3 மாதத்தில் மட்டும் 18 கொலைகள் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரங்கேறியுள்ளது. நகைக்காக, முன் விரோதம், குடும்ப பிரச்சினை, கள்ளக்காதல், சொத்து பிரச்சினை ஆகியவற்றால் தொடர் கொலைகள் நடந்து வருகிறது. மேலும் சிறுமலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    பெரும்பாலான கொலைகள் சொந்த பிரச்சினையில் நடந்திருந்தாலும் தொடர் சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    2023ம் ஆண்டு தொடங்கிய 2-வது நாளில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நிலக்கோட்டை வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். 13-ந் தேதி வடமதுரையில் வாலிபர் கேரம் விளையாட்டு தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார். 20-ந் தேதி தாடிக்கொம்பு உலகம்பட்டியில் முதியவரும், அதே நாளில் மறவபட்டியில் ஐ.டி.ஊழியரும் கொல்லப்பட்டனர்.

    பிப்ரவரி மாதம் 10-ந்தேதி குஜிலியம்பாறையில் வாலிபரை கொன்று கிணற்றில் வீசினர். 13-ந் தேதி எரமநாயக்கன் பட்டியிலும், 17-ந் தேதி ரெட்டியபட்டியிலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. 24-ந் தேதி பட்டிவீரன்பட்டியில் மகனை தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்றார்.

    மார்ச் மாதம் 2-ந் தேதி சொத்து தகராறில் விவசாயிகள் மீது முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தினார். அதே நாளில் வேடப்பட்டியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். 3-ந் தேதி கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் கொலை செய்யப்பட்டார். அதே நாளில் தொழிலாளியும் கொல்லப்பட்டார். 4-ந் தேதி கூலித் தொழிலாளி முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். 7-ந் தேதி குஜிலியம்பாறையில் கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி கொன்றனர். 14-ந் தேதி சின்னாளப்பட்டியில் தந்தையை மகன்களே வெட்டி கொன்றனர். கடந்த 11-ந் தேதி மூதாட்டியை குடிபோதையில் வாலிபர் கற்பழித்து கொன்றார். இந்த நிலையில் 18-வது சம்பவமாக இன்று வீடு புகுந்து வியாபாரி கொல்லப்பட்டுள்ளார்.

    • ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.
    • நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு மேற்கு தெருவை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 60). அதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி பாதர்.

    முருகேசன் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தார். முருகேசனுக்கும் அவரது தம்பி பாதருக்கும் இடையே கடந்த 5 ஆண்டாக நிலம் பிரிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நேற்று மாலை விவசாயி பாதரின் வீட்டின் அருகே முருகேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது பாதரின் மகன் தினேஷ் குமார் (31), பெரியப்பா முருகேசனிடம், நிலத்தை எப்போது பிரித்துக் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், அங்கிருந்த கட்டையால் முருகேசனை பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சரிந்து விழுந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1 மணி அளவில் முருகேசன் இறந்தார்.

    இதுபற்றி ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார், பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தினேஷ் குமாரை கைது செய்தனர்.

    நிலத்தகராறில் வியாபாரி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 55). பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி உமா, இவர்களுக்கு அருண்குமார் என்ற மகன், அனிதா என்ற மகள் உள்ளனர்.

    சேட்டு, ஊர் மையப்பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தினமும் இரவு தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்று இரவு 10 மணியளவில் தூங்குவதற்காக கோவிலுக்கு சென்றார். அதே ஊரை சேர்ந்த சிவா (45), சிவசங்கர் (30) ஆகியோர் நாகாத்தம்மன் கோவில் அருகே அமர்ந்து மது குடித்தனர்.

    பின்னர் மது போதையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட சேட்டு தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சிவசங்கர் மட்டும் மீண்டும் நாகாத்தம்மன் கோவிலுக்கு வந்தார்.

    அப்போது சேட்டுவிடம் சென்று நீ ஏன் தகராறை விலக்கி விட்டாய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சிவசங்கர் அருகே கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து சேட்டுவின் தலையில் தாக்கினார். இதில் சேட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து சிவசங்கர் சென்று விட்டார்.

    இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் சேட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சேட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் அப்பகுதி மக்கள் கூறும்போது இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுகிறது. இதனால் அடிக்கடி தகராறுகளும் ஏற்படுகிறது. இதனை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    கொலை சம்பந்தமாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெரிய ஏரிக்கு விரைந்து சென்றனர்.

    ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருந்தது. இதனால் பரிசல் வரவழைக்கப்பட்டது. பின்னர் பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காயம் அடைந்த காளிதாஸ், மாரியம்மாள் இருவரும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
    • காளிதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கீழவெயிலுகந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது70). வடை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள்(45).

    நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மாரியம்மாள் சூடம் ஏற்றியதாக கூறப்படுகிறது. அப்போது, அதே காம்பவுண்டில் வசித்து வரும் சங்கரின் மனைவி பேச்சியம்மாள், மாரியம்மாளிடம் பொது பாதையில் எப்படி சூடம் ஏற்றலாம் என வாக்குவாதம் செய்து தகராறு செய்துள்ளார்.

    பேச்சியம்மாளுடன் சங்கரும் சேர்ந்து தகாத வார்த்தையால் மாரியம்மாளையும், அவரது கணவர் காளிதாசையும் பேசி காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் காயம் அடைந்த காளிதாஸ், மாரியம்மாள் இருவரும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு காளிதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் கொலை வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராஜேஸ்வரியை பின் தொடர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வந்திருந்த அரிவாளால் திடீரென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
    • ராஜேஸ்வரி கொலை தொடர்பாக நாகவள்ளி, சக்திவேல் மற்றும் சூர்யா, ஜெகதீசன், ஜான்சன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 35). இவர் சென்னை மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 19-ந்தேதி இவர் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்தார். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்ற போது பயணிகளுடன் ராஜேஸ்வரியும் இறங்கினார்.

    அப்போது, ராஜேஸ்வரியை பின் தொடர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வந்திருந்த அரிவாளால் திடீரென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவு மூலம் கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரியை அவரது தங்கை நாகவள்ளி, அவரது கணவர் சக்திவேல் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து ராஜேஸ்வரி கொலை தொடர்பாக நாகவள்ளி, சக்திவேல் மற்றும் சூர்யா, ஜெகதீசன், ஜான்சன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாம்பலம் ரெயில் நிலையத்தில் சக்திவேல் உள்ளிட்ட சிலருக்கும் வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ராஜேஸ்வரி இந்த விவகாரத்தில் தலையிட்டு சக்திவேல் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு போட செய்தார். இது சக்திவேல் தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் சக்திவேல் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளியை காதலித்து திருமணம் செய்தார். இதை அறிந்த ராஜேஸ்வரி சக்தி வேலையும், நாகவள்ளியையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.

    இதனால் ராஜேஸ்வரி மீது ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது மனைவி நாகவள்ளி மற்றும் நண்பர்கள் சூர்யா, ஜெகதீஷ், ஜான்சன் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கைதான 5 பேரிடம் இருந்தும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கைதான நாகவள்ளி போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வசித்து வந்தேன். இந்த சூழலில் சக்திவேலுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். இது எனது அக்காள் ராஜேஸ்வரிக்கு பிடிக்கவில்லை. அவள் அடிக்கடி என்னிடம் தகராறு செய்துவந்தாள்.

    சக்திவேலுடன் என்னை வாழ விடமாட்டேன் என்று மிரட்டிவந்தாள். அவளது மிரட்டலால் சக்திவேலுடன் வாழ முடியாதோ என்று எண்ணினேன். இதனால் சக்திவேலிடம் "நான் உனக்கு முழுமையாக வேண்டுமா? அப்படி என்றால் எனது அக்காளை கொன்றுவிடு" என்று கூறினேன். இதனால் சக்திவேல் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம். ராஜேஸ்வரி தினமும் வியாபாரம் செய்யும் ரெயிலை நோட்டமிட்டோம். அவள் வரும் நேரத்தையும், எங்கு வைத்து கொலை செய்யலாம்? என்றும் ரகசியமாக ஆலோசித்தோம். அதன்படி ரெயிலில் பழ வியாபாரம் செய்துவிட்டு வந்தபோது சக்திவேல் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து எங்கள் திட்டப்படி கொலை செய்தனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மர்ம நபர் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் பாலன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
    • கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பா குடியை சேர்ந்தவர் பாலன் (வயது45). இவர் சொந்தமாக கீசெயின் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். மேலும் வீடுகளுக்கு குடிநீர் கேன் சப்ளை செய்யும் தொழிலும் பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தனது கம்பெனியை மூடிவிட்டு பாலன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். சிக்கந்தர்சாவடி-கோவில்பாப்பாகுடி மெயின் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது திடீரென மர்ம நபர் ஒருவர் வழிமறித்ததாக தெரிகிறது.

    உடனே பாலன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது மர்ம நபர் கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாலனின் காலில் சரமாரியாக வெட்டினார்.

    இதன் காரணமாக பாலனால் அங்கிருந்து தப்பி செல்ல முடியவில்லை. தொடர்ந்து மர்ம நபர் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் பாலன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். பின்னர் கொலையாளி அங்கிருந்து தப்பினார்.

    இரவு நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக தெரியவில்லை. சில மணி நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் பாலன் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணப்பிரச்சினை, முன்விரோதம் போன்ற காரணத்தால் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் கொலையாளியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அய்யம்பெருமாள் இறந்து கிடந்த குடோன் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • கைதான அனில்ஜாவிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கிராமம் தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது53). பழ வியாபாரி. இவர் கடந்த 7-ந்தேதி அதிகாலை பழம் வாங்க கோயம்பேடு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார். இந்த நிலையில் அய்யம்பெருமாள் வீட்டின் அருகே உள்ள ஒரு குடோன் வாசலில் இறந்து கிடந்தார். திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்மீரான் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவரது விலா எலும்பு முறிந்திருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அய்யம்பெருமாள் இறந்து கிடந்த குடோன் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அங்கு தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அனில் ஜா(45) என்பவர் அய்யம்பெருமாளை கொசுவலை தகராறில் அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அனில்ஜாவை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று அதிகாலை அய்யம் பெருமாள் பழம் வாங்க கோயம்பேடு செல்லாமல் அனில்ஜா பயன்படுத்தும் கொசுவலையை எடுத்து போர்த்திக்கொண்டு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரியில் தூங்கி உள்ளார். இதனை கவனித்த அனில்ஜா கொசுவலையை எடுத்தது தொடர்பாக அய்யம் பெருமாளிடம் மோதலில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் அவரை லாரியில் இருந்து கீழே தள்ளி விட்டதாகவும் தெரிகிறது. இதில் அய்யம்பெருமாள் இறந்து போனதால் பயந்து போன அனில்ஜா எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அய்யம்பெருமாள் அடிக்கடி மதுபோதையில் இருப்பதால் முதலில் அவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    கைதான அனில்ஜாவிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் அவினாசி சாலை எஸ்.ஏ.பி.சந்திப்பு ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத்பாண்டி (வயது30), பால் வியாபாரி. இவருக்கு திருமணமாகி விட்டது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து சரத்பாண்டியின் நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த நரசிம்ம பிரபு(25), கணேஷ் (30) மற்றும் சுள்ளான் பிரபு (25) ஆகியோர் பார்ட்டி வைக்குமாறு சரத்பாண்டியை வலியுறுத்தினர்.

    நண்பர்களின் தொல்லை தாங்க முடியாமல் கடந்த 13-ந்தேதி சரத்பாண்டி, நரசிம்மபிரபு, கணேஷ், சுள்ளான் பிரபு ஆகிய 4 பேரும் அங்கேரிபாளையம் பிரிவு சுடுகாட்டிற்கு மது குடிக்க சென்றனர். அங்கு 4 பேரும் அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது போதை தலைக்கு ஏறியதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் நரசிம்மபிரபு, கணேஷ் மற்றும் சுள்ளான்பிரபு ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தியால் சரத்பாண்டியை குத்திவிட்டு தப்பி சென்றனர்.

    இதில் ரத்த வௌ்ளத்தில் மிதந்த சரத்பாண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாண்டி நேற்று இரவு இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நரசிம்மபிரபு, கணேஷ் மற்றும் சுள்ளான் பிரபு ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கண்ணாடிபுத்தூர் அமராவதி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
    • குடிபோதையில் பாண்டியின் தாயை பற்றி மதியழகன் அவதூறாக பேசியுள்ளார்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த கருப்புசாமிபுதூர் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் அமராவதி வாய்க்காலில் பாலத்துக்கு அடியில் தலையில் காயத்துடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதை கண்டனர். அந்த உடலின் மேல் இலை தழைகள் உள்ளிட்ட குப்பைகள் மூடியிருந்தது. மேலும் கழுத்து மற்றும் கைகளில் ருத்ராட்ச மாலை அணிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அந்த உடல் காணப்பட்டது.

    உடனடியாக இது குறித்து மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்தநிலையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த மதியழகன்(வயது 45) என்பது தெரியவந்தது. இரும்பு வியாபாரியான அவர் தனது நண்பர்களும் இரும்பு வியாபாரிகளுமான தூத்துக்குடியை சேர்ந்த பாண்டி (45), முருகன் (40)ஆகியோருடன் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்திற்கு இரும்புகள் வாங்க சென்றனர்.

    அப்போது கண்ணாடிபுத்தூர் அமராவதி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். குடிபோதையில் பாண்டியின் தாயை பற்றி மதியழகன் அவதூறாக பேசியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 2பேரும் சேர்ந்து மதியழகன் தலையில் கல்லைப்போட்டு கொன்றனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து தலைமறைவான பாண்டி, முருகன் ஆகிய 2பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×