search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி கொலை"

    • கொலை வழக்கில் சிவராஜ் என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள வன்னிமாநகரத்தை சேர்ந்தவர் வேம்படித்துரை ( வயது 42).

    வியாபாரியான இவர் சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 5-ந் தேதி உறவினரின் துக்க நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான வன்னிமாநகருக்கு வந்தார்.

    அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு செல்லும்போது ஒரு கும்பல் காரை ஏற்றியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது. இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுரு என்ற சிவலட்சம் என்பவர் கொலையில் வேம்படிதுரை உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்ததும், அதற்கு பழிக்குப்பழியாக வேம்படி துரை கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

    இதற்கிடையே வேம்படிதுரை கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த சொர்ண கோபி (32), சுதாகர் (25) ஆகியோர் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர். முத்துக்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சிவராஜ் என்பவரை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

    இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப் பட்ட சிவகுரு என்பவரின் சகோதரர் ஆவார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாட்டில் ஆங்காங்கே வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
    • காவல்துறை இயக்குனர் தகுந்த நடவடிக்கை எடுத்து ரவுடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச்செயலாளர் எஸ். சௌந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில், நெய்வேலியில் பிரியாணி கடை நடத்தி வந்த கண்ணன் என்பவரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பகுதியை சேர்ந்த ரவுடிகள் பிரியாணி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் தகராறு செய்துள்ளனர்.

    இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 2 நாட்களுக்கு முன் அதே ரவுடிகள் கண்ணன் கடையை மூடி விட்டு இரவு வீட்டுக்கு செல்லும் வழியில் கற்களால் தாக்கி அரிவாளால் வெட்டி முகத்தை சிதைத்து படுகொலை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆங்காங்கே வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இது தொடர்பாக காவல்துறை இயக்குனர் தகுந்த நடவடிக்கை எடுத்து ரவுடிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • கொலையாளி மணப்பாறையில் கைது
    • 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்

    வேலூர்:

    குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில்,துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதில், கொலையான நபர் அதே பகுதியைச் சேர்ந்த சமோசா வியாபாரி ஹயாத் பாஷா (வயது 35) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.

    அதில், கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்த மற்றொரு ஹயாத் பாஷா (34) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தலை மறைவாக இருந்த அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மணப்பாறை சென்ற தனிப்படையினர் ஹயாத் பாஷாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, சமோசா வியாபாரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் தனது மனைவி குறித்து அவர் தவறாக பேசியதால் கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

    இவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைது செய்யபட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

    • கடந்த 24-ந்தேதி நள்ளிரவு அழகர், தனது நண்பர்களுடன் புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார்.
    • ஆத்திரமடைந்த முருகேசன், விறகு கட்டையால் அழகரை சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் லட்சுமனன் மகன் அழகர் (வயது 38). இவர் ரெடிமேட் ஆடைகள் விற்பனை தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

    அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (43). இவர் புதியம்புத்தூரில் உள்ள ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் சமீபத்தில் காமராஜ் நகரில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 24-ந்தேதி நள்ளிரவு அழகர், தனது நண்பர்களுடன் புதியம்புத்தூர் மெயின் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு முருகேசன் வந்துள்ளார். அங்கு இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், விறகு கட்டையால் அழகரை சரமாரி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே முருகேசன் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அழகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணாடிபுத்தூர் அமராவதி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
    • குடிபோதையில் பாண்டியின் தாயை பற்றி மதியழகன் அவதூறாக பேசியுள்ளார்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தையடுத்த கருப்புசாமிபுதூர் பகுதியில் அமராவதி பிரதான கால்வாய் உள்ளது. தற்போது இந்த கால்வாயில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் அமராவதி வாய்க்காலில் பாலத்துக்கு அடியில் தலையில் காயத்துடன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதை கண்டனர். அந்த உடலின் மேல் இலை தழைகள் உள்ளிட்ட குப்பைகள் மூடியிருந்தது. மேலும் கழுத்து மற்றும் கைகளில் ருத்ராட்ச மாலை அணிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அந்த உடல் காணப்பட்டது.

    உடனடியாக இது குறித்து மடத்துக்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்தநிலையில் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த மதியழகன்(வயது 45) என்பது தெரியவந்தது. இரும்பு வியாபாரியான அவர் தனது நண்பர்களும் இரும்பு வியாபாரிகளுமான தூத்துக்குடியை சேர்ந்த பாண்டி (45), முருகன் (40)ஆகியோருடன் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்திற்கு இரும்புகள் வாங்க சென்றனர்.

    அப்போது கண்ணாடிபுத்தூர் அமராவதி வாய்க்கால் பாலத்துக்கு அடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். குடிபோதையில் பாண்டியின் தாயை பற்றி மதியழகன் அவதூறாக பேசியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் 2பேரும் சேர்ந்து மதியழகன் தலையில் கல்லைப்போட்டு கொன்றனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து தலைமறைவான பாண்டி, முருகன் ஆகிய 2பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் அவினாசி சாலை எஸ்.ஏ.பி.சந்திப்பு ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத்பாண்டி (வயது30), பால் வியாபாரி. இவருக்கு திருமணமாகி விட்டது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து சரத்பாண்டியின் நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த நரசிம்ம பிரபு(25), கணேஷ் (30) மற்றும் சுள்ளான் பிரபு (25) ஆகியோர் பார்ட்டி வைக்குமாறு சரத்பாண்டியை வலியுறுத்தினர்.

    நண்பர்களின் தொல்லை தாங்க முடியாமல் கடந்த 13-ந்தேதி சரத்பாண்டி, நரசிம்மபிரபு, கணேஷ், சுள்ளான் பிரபு ஆகிய 4 பேரும் அங்கேரிபாளையம் பிரிவு சுடுகாட்டிற்கு மது குடிக்க சென்றனர். அங்கு 4 பேரும் அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது போதை தலைக்கு ஏறியதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் நரசிம்மபிரபு, கணேஷ் மற்றும் சுள்ளான்பிரபு ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தியால் சரத்பாண்டியை குத்திவிட்டு தப்பி சென்றனர்.

    இதில் ரத்த வௌ்ளத்தில் மிதந்த சரத்பாண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாண்டி நேற்று இரவு இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நரசிம்மபிரபு, கணேஷ் மற்றும் சுள்ளான் பிரபு ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அய்யம்பெருமாள் இறந்து கிடந்த குடோன் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    • கைதான அனில்ஜாவிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கிராமம் தெருவை சேர்ந்தவர் அய்யம்பெருமாள்(வயது53). பழ வியாபாரி. இவர் கடந்த 7-ந்தேதி அதிகாலை பழம் வாங்க கோயம்பேடு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு சென்றார். இந்த நிலையில் அய்யம்பெருமாள் வீட்டின் அருகே உள்ள ஒரு குடோன் வாசலில் இறந்து கிடந்தார். திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்மீரான் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவரது விலா எலும்பு முறிந்திருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அய்யம்பெருமாள் இறந்து கிடந்த குடோன் பகுதியில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அங்கு தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அனில் ஜா(45) என்பவர் அய்யம்பெருமாளை கொசுவலை தகராறில் அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து அனில்ஜாவை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தன்று அதிகாலை அய்யம் பெருமாள் பழம் வாங்க கோயம்பேடு செல்லாமல் அனில்ஜா பயன்படுத்தும் கொசுவலையை எடுத்து போர்த்திக்கொண்டு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரியில் தூங்கி உள்ளார். இதனை கவனித்த அனில்ஜா கொசுவலையை எடுத்தது தொடர்பாக அய்யம் பெருமாளிடம் மோதலில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் அவரை லாரியில் இருந்து கீழே தள்ளி விட்டதாகவும் தெரிகிறது. இதில் அய்யம்பெருமாள் இறந்து போனதால் பயந்து போன அனில்ஜா எதுவும் தெரியாதது போல் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அய்யம்பெருமாள் அடிக்கடி மதுபோதையில் இருப்பதால் முதலில் அவர் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    கைதான அனில்ஜாவிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மர்ம நபர் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் பாலன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
    • கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில் பாப்பா குடியை சேர்ந்தவர் பாலன் (வயது45). இவர் சொந்தமாக கீசெயின் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். மேலும் வீடுகளுக்கு குடிநீர் கேன் சப்ளை செய்யும் தொழிலும் பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தனது கம்பெனியை மூடிவிட்டு பாலன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். சிக்கந்தர்சாவடி-கோவில்பாப்பாகுடி மெயின் ரோட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது திடீரென மர்ம நபர் ஒருவர் வழிமறித்ததாக தெரிகிறது.

    உடனே பாலன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது மர்ம நபர் கண் இமைக்கும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாலனின் காலில் சரமாரியாக வெட்டினார்.

    இதன் காரணமாக பாலனால் அங்கிருந்து தப்பி செல்ல முடியவில்லை. தொடர்ந்து மர்ம நபர் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் பாலன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். பின்னர் கொலையாளி அங்கிருந்து தப்பினார்.

    இரவு நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக தெரியவில்லை. சில மணி நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் பாலன் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணப்பிரச்சினை, முன்விரோதம் போன்ற காரணத்தால் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் கொலையாளியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ராஜேஸ்வரியை பின் தொடர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வந்திருந்த அரிவாளால் திடீரென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
    • ராஜேஸ்வரி கொலை தொடர்பாக நாகவள்ளி, சக்திவேல் மற்றும் சூர்யா, ஜெகதீசன், ஜான்சன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 35). இவர் சென்னை மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்து வந்தார்.

    கடந்த 19-ந்தேதி இவர் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்தார். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்ற போது பயணிகளுடன் ராஜேஸ்வரியும் இறங்கினார்.

    அப்போது, ராஜேஸ்வரியை பின் தொடர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வந்திருந்த அரிவாளால் திடீரென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவு மூலம் கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரியை அவரது தங்கை நாகவள்ளி, அவரது கணவர் சக்திவேல் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து ராஜேஸ்வரி கொலை தொடர்பாக நாகவள்ளி, சக்திவேல் மற்றும் சூர்யா, ஜெகதீசன், ஜான்சன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாம்பலம் ரெயில் நிலையத்தில் சக்திவேல் உள்ளிட்ட சிலருக்கும் வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ராஜேஸ்வரி இந்த விவகாரத்தில் தலையிட்டு சக்திவேல் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு போட செய்தார். இது சக்திவேல் தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் சக்திவேல் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளியை காதலித்து திருமணம் செய்தார். இதை அறிந்த ராஜேஸ்வரி சக்தி வேலையும், நாகவள்ளியையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.

    இதனால் ராஜேஸ்வரி மீது ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது மனைவி நாகவள்ளி மற்றும் நண்பர்கள் சூர்யா, ஜெகதீஷ், ஜான்சன் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கைதான 5 பேரிடம் இருந்தும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கைதான நாகவள்ளி போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வசித்து வந்தேன். இந்த சூழலில் சக்திவேலுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். இது எனது அக்காள் ராஜேஸ்வரிக்கு பிடிக்கவில்லை. அவள் அடிக்கடி என்னிடம் தகராறு செய்துவந்தாள்.

    சக்திவேலுடன் என்னை வாழ விடமாட்டேன் என்று மிரட்டிவந்தாள். அவளது மிரட்டலால் சக்திவேலுடன் வாழ முடியாதோ என்று எண்ணினேன். இதனால் சக்திவேலிடம் "நான் உனக்கு முழுமையாக வேண்டுமா? அப்படி என்றால் எனது அக்காளை கொன்றுவிடு" என்று கூறினேன். இதனால் சக்திவேல் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம். ராஜேஸ்வரி தினமும் வியாபாரம் செய்யும் ரெயிலை நோட்டமிட்டோம். அவள் வரும் நேரத்தையும், எங்கு வைத்து கொலை செய்யலாம்? என்றும் ரகசியமாக ஆலோசித்தோம். அதன்படி ரெயிலில் பழ வியாபாரம் செய்துவிட்டு வந்தபோது சக்திவேல் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து எங்கள் திட்டப்படி கொலை செய்தனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காயம் அடைந்த காளிதாஸ், மாரியம்மாள் இருவரும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
    • காளிதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கீழவெயிலுகந்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது70). வடை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மாரியம்மாள்(45).

    நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மாரியம்மாள் சூடம் ஏற்றியதாக கூறப்படுகிறது. அப்போது, அதே காம்பவுண்டில் வசித்து வரும் சங்கரின் மனைவி பேச்சியம்மாள், மாரியம்மாளிடம் பொது பாதையில் எப்படி சூடம் ஏற்றலாம் என வாக்குவாதம் செய்து தகராறு செய்துள்ளார்.

    பேச்சியம்மாளுடன் சங்கரும் சேர்ந்து தகாத வார்த்தையால் மாரியம்மாளையும், அவரது கணவர் காளிதாசையும் பேசி காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தில் காயம் அடைந்த காளிதாஸ், மாரியம்மாள் இருவரும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு காளிதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்துராஜ் கொலை வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 55). பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி உமா, இவர்களுக்கு அருண்குமார் என்ற மகன், அனிதா என்ற மகள் உள்ளனர்.

    சேட்டு, ஊர் மையப்பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தினமும் இரவு தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்று இரவு 10 மணியளவில் தூங்குவதற்காக கோவிலுக்கு சென்றார். அதே ஊரை சேர்ந்த சிவா (45), சிவசங்கர் (30) ஆகியோர் நாகாத்தம்மன் கோவில் அருகே அமர்ந்து மது குடித்தனர்.

    பின்னர் மது போதையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட சேட்டு தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சிவசங்கர் மட்டும் மீண்டும் நாகாத்தம்மன் கோவிலுக்கு வந்தார்.

    அப்போது சேட்டுவிடம் சென்று நீ ஏன் தகராறை விலக்கி விட்டாய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சிவசங்கர் அருகே கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து சேட்டுவின் தலையில் தாக்கினார். இதில் சேட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து சிவசங்கர் சென்று விட்டார்.

    இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் சேட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சேட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் அப்பகுதி மக்கள் கூறும்போது இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுகிறது. இதனால் அடிக்கடி தகராறுகளும் ஏற்படுகிறது. இதனை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    கொலை சம்பந்தமாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெரிய ஏரிக்கு விரைந்து சென்றனர்.

    ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருந்தது. இதனால் பரிசல் வரவழைக்கப்பட்டது. பின்னர் பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நண்பர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு நவ்வலடி சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.
    • மதுபோதையில் இருந்ததால் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள நவ்வலடி மேலத்தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

    இவரும், நவ்வலடி நடுத்தெருவை சேர்ந்த செல்வகுமார் (46) என்பவரும் நண்பர்கள். இவரும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் தினமும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.

    நேற்று இரவு இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு நவ்வலடி சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அப்போது முத்து, செல்வகுமாரின் மனைவி குறித்து பேசி உள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்ததால் 2 பேரும் ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் கையில் இருந்த கத்தியால் முத்துவை கழுத்தில் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே முத்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.

    தகவல் அறிந்த உவரி போலீசார் அங்கு விரைந்து சென்று முத்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது மனைவி குறித்து பேசியதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவர் தெரிவித்தார்.

    ×