search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணி அருகே தலையில் கல்லை போட்டு பால் வியாபாரி கொலை
    X

    ஆரணி அருகே தலையில் கல்லை போட்டு பால் வியாபாரி கொலை

    • சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    ஆரணி:

    ஆரணி அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 55). பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி உமா, இவர்களுக்கு அருண்குமார் என்ற மகன், அனிதா என்ற மகள் உள்ளனர்.

    சேட்டு, ஊர் மையப்பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் தினமும் இரவு தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்று இரவு 10 மணியளவில் தூங்குவதற்காக கோவிலுக்கு சென்றார். அதே ஊரை சேர்ந்த சிவா (45), சிவசங்கர் (30) ஆகியோர் நாகாத்தம்மன் கோவில் அருகே அமர்ந்து மது குடித்தனர்.

    பின்னர் மது போதையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட சேட்டு தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் சிவசங்கர் மட்டும் மீண்டும் நாகாத்தம்மன் கோவிலுக்கு வந்தார்.

    அப்போது சேட்டுவிடம் சென்று நீ ஏன் தகராறை விலக்கி விட்டாய் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த சிவசங்கர் அருகே கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து சேட்டுவின் தலையில் தாக்கினார். இதில் சேட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அங்கிருந்து சிவசங்கர் சென்று விட்டார்.

    இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் சேட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சேட்டு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் அப்பகுதி மக்கள் கூறும்போது இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்கப்படுகிறது. இதனால் அடிக்கடி தகராறுகளும் ஏற்படுகிறது. இதனை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    கொலை சம்பந்தமாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சேட்டுவை கொலை செய்த சிவசங்கரன் செய்யாறு அடுத்த சித்தேரி பெரிய ஏரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் பெரிய ஏரிக்கு விரைந்து சென்றனர்.

    ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருந்தது. இதனால் பரிசல் வரவழைக்கப்பட்டது. பின்னர் பரிசலில் தனி படை போலீசார் சென்று முட்புதரில் பதுங்கி இருந்த சிவசங்கரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×