செய்திகள்
தற்கொலை

நரிக்குடியில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2019-07-24 16:48 GMT   |   Update On 2019-07-24 16:48 GMT
திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சுழி:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மிதலைக்குளம் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரது மகள் ஊர்வசி (வயது20). இவருக்கும் நரிக்குடியை சேர்ந்த முத்துமுருகன்(33) என்பவருக்கும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முத்துமுருகன் வல்லக்குளத்தில் உள்ள அரசுப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஊர்வசி வீட்டை உள்புறம் பூட்டிக் கொண்டு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

வீட்டில் இருந்து புகையுடன் அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கும், நரிக்குடி போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும் போலீசாரும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். அதற்குள், ஊர்வசி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஊர்வசியின் உடல் பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அருப்புக்கோட்டை கோட்டாட்சியரும் விசாரணை நடத்துகிறார்.

புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News