பழனி அருகே கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்
பழனி:
பழனி அருகில் உள்ள வேலம்பட்டியில் புற்றுக்கண் வீரமாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.
ஆனால் உடைக்க முடியாததால் உண்டிலை கையோடு தூக்கி சென்றனர். அதிகாலையில் கோவிலுக்கு வந்த பூசாரி மற்றும் ஊழியர்கள் கோவில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் இரும்பு கம்பிகளுடன் உள்ளே புகுந்து கேமிரா பொருத்தி இருந்ததை பார்த்தவுடன் கைக்குட்டையால் முகத்தை மறைத்தனர்.
அதன்பின் உண்டியலை தூக்கி வடக்கு சுற்றுச்சுவர் மீது வைத்து கீழே தள்ளி விட்டு பின்னர் தாங்களும் அதே சுவற்றின் மீது ஏறி தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.