சூலூர் அருகே கோவிலின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
கோவை:
கோவை சூலூர் அருகே உள்ள சுப்பராயம்பாளையத்தில் விநாயர் ஸ்ரீ மகாலட்சுமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு கோவிலை பூசாரி ஆனந்தன் (வயது 43) என்பவர் வழக்கம் போல பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கோவிலை திறப்பதற்காக வந்தார்.
அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஆனந்தன் உள்ளே சென்று பார்த்தார். கோவிலில் இருந்த உண்டியலை உடைத்த மர்மநபர்கள் அதில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம், பீரோவில் இருந்த சாமியின் 2 பவுன் தங்க செயின் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. பின்னர் இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் செயினை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.