செய்திகள்
வத்தலக்குண்டு அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்- போலீஸ் நிலையம் முற்றுகை
வத்தலக்குண்டு அருகே சிறுமியை கடத்திய வாலிபரிடம் இருந்து மீட்க கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே விருவீடு போலீஸ் சரகத்துக்குட்பட்ட அக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 21). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவரிடம் அஜித்குமார் திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றுள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி யடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அக்கம் பக்கம் விசாரித்ததில் அஜித் குமார் சிறுமியை கடத்திச் சென்ற விபரம் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விருவீடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தங்கள் மகளை மீட்டுத் தர வேண்டும் என கோரி போலீசாரிடம் வலியுறுத்தினர். அவர்களை சமரசம் செய்த போலீசார் வாலிபரையும் சிறுமியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.