செய்திகள்
மரணம்

திருபுவனையில் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மர்ம மரணம்

Published On 2019-07-09 11:51 GMT   |   Update On 2019-07-09 11:51 GMT
திருபுவனையில் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபுவனை:

மதகடிப்பட்டு அருகே தமிழக பகுதியான கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 53). இவர் திருபுவனையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், சேதுராமன் என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பெருமாள் தொழிற்சாலைக்கு காவல் பணிக்கு சென்றார். நேற்று காலை மாற்று காவலாளியான குப்புசாமி என்பவர் காவல் பணியை மேற்கொள்ள வந்த போது ஓய்வு அறையில் பெருமாள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தொழிற்சாலை நிர்வாகத்தினர் பெருமாளின் மகன் சேதுராமனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேதுராமன் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு வசந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து பெருமாள் மாரடைப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News