அங்கன்வாடி பெண் ஊழியரை திட்டியதாக திமுக வட்ட செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
சென்னை:
சென்னை முகப்பேர் கிழக்கு பிளாக்கில் வசித்து வருபவர் இர்பான். இவரது மனைவி பார்த்திமா. இவர்களது குழந்தையை அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்க விரும்பினர்.
குழந்தையை அழைத்து சென்று அங்கன்வாடி ஊழியர் ராணியிடம் சேர்க்கும்படி பாத்திமா கூறியுள்ளார். அதற்கு, இங்கு 25 குழந்தைகள் படிப்பதாகவும் உங்கள் வீடு அருகே உள்ள மற்றொரு மையத்தில் சேர்க்கும்படி கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது கணவரிடம் தகவல் தெரிவித்தார். மேலும் 93-வது வட்ட தி.மு.க. செயலாளர் டீக்கா உள்ளிட்ட 10 பேருடன் அங்கன்வாடி மையத்துக்கு சென்று ஊழியர் ராணியை தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியுள்ளார்.
இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அங்கு கூடி நின்றவர்களை விரட்டினர். ராணியின் புகாரின் பேரில் போலீசார் இர்பான், பாத்திமா, வட்ட செயலாளர் டீக்கா ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.