மதுரை அருகே இளம்பெண்கள் திடீர் மாயம்
மதுரை:
மதுரை மாவட்டம் பனையூரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பாண்டீஸ்வரி (வயது 19). அதே பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் பிரதீபா (19). இவர்கள் இருவரும் உறவினர்கள்.
பாண்டீஸ்வரியும், பிரதீபாவும் கடந்த 1-ந் தேதி பனையூரை அடுத்த மேலத்தெருவில் உள்ள டெய்லரிங் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து பாண்டீஸ்வரியின் தந்தை கணேசன், சிலைமான் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை பொய்கைகரைப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வளர்கருப்பி. இவர்களுக்கு 2 வயதில் பொன்னழகி என்ற பெண் குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று முருகன் வேலைக்குச் சென்று விட்டார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி மற்றும் பெண் குழந்தை மாயமானது தெரியவந்தது.
இது குறித்து முருகன் அப்பன் திருப்பதி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.