மது குடித்தபோது தகராறு: தொழிலாளி கொலை - 2 பேர் கைது
திருநின்றவூர்:
ஆவடியை அடுத்த வீராபுரம், புதிய கன்னியாநகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45) பெயிண்டர். மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
கடந்த 2-ந் தேதி அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் ராஜா, சாமுவேல் ஆகியோருடன் சென்று மது அருந்தினார். அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து பாண்டியனை கல்லால் சரமாரியாக தாக்கினர். இதில் அவரது தலை, முகத்தில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. பின்னர் பாண்டியன் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அவரது வீடு பூட்டிக் கிடந்தது. மேலும் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது.
சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர்.
அங்கு உடல் அழுகிய நிலையில் பாண்டியன் இறந்து கிடந்தார். கல்லால் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பெறாமல் வீட்டில் தூங்கி உள்ளார். இதில் அதிக அளவு ரத்தம் வெளியாகி பாண்டியன் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, சாமுவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.