கோவில்பாளையத்தில் இரும்பு கடையில் ரூ.4¼ லட்சம் பணம் திருட்டு
கோவை:
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொங்கு நகரை சேர்ந்தவர் கணேஷ்வரன் (வயது 33). இவர் அந்த பகுதியில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக வந்தார்.
அப்போது கடையின் பின்பக்க மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையில் இருந்த லாக்கரை டிர்லிங் மிஷினால் திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த ரூ. 4 லட்சத்து 34 ஆயிரத்து 871 ரொக்க பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து கணேஷ்வரன் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து இரும்பு கடையில் லாக்கரை திறந்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.