செய்திகள்

சென்னையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

Published On 2019-06-26 07:53 GMT   |   Update On 2019-06-26 09:43 GMT
தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மழை தூரல்கள் விழுந்தன.

இந்த நிலையில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

வெப்ப சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்துவந்த நிலையில் தற்போது தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.



இதன் காரணமாக வடதமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 6 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோத்தகிரி, சேலம், பரங்கிப்பேட்டையில் 3 செ.மீட்டர் மழை, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News