உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது: மாநில செயலாளர் தகவல்
பழனி:
பா.ஜ.க. சார்பில் இளைஞர் சங்கம திருவிழா என்ற கூட்டம் பழனியில் நடந்தது. மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமை தாங்கினார். விவசாய அணி செயற்குழு உறுப்பினர் திருமலைச்சாமி, பழனி நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் சில அமைப்பினர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசு குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் தவறான கருத்துகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு தமிழக நலனில் அதிக அக்கறையோடு செயல்பட்டு பல நல்ல திட்டங்களை வழங்கியுள்ளது என்றார். தொடர்ந்து அவர் கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வளர்க்கும் பொருட்டு ஜூலை 6 முதல் உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும் இளைஞர்களிடையே கூட்டம் நடத்தி, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. தயாராகி வருகிறது. மேலும் பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்துரையாடல் கூட்டம் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.