செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே நிலம் விற்பதாக கூறி விவசாயியிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த நர்ஸ்

Published On 2019-06-24 10:28 GMT   |   Update On 2019-06-24 10:28 GMT
நிலம் வாங்கித் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.19 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி ஜே.ஜே.நகரைச் சேர்ந்தவர் கரிகாலன் (வயது 48). விவசாயி. இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், அவரது மனைவி நாகஜோதி ஆகியோர் தங்களிடம் 9 செண்ட் இடம் இருப்பதாகவும் அதை விற்கப் போவதாகவும் கூறினர்.

அதை கரிகாலன் வாங்குவதாக தெரிவித்தார். இதையடுத்து ஒரு செண்டுக்கு ரூ.2.15 லட்சம் என பேசி நிலத்துக்கு கரிகாலன் பணம் கொடுத்தார். அதன்படி முதலில் முன் பணமாக ரூ.6½ லட்சமும், பின்னர் 12.85 லட்சமும் பணத்தை கொடுத்தார். இந்த நிலையில் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

அப்போது அந்த இடம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. வேறு ஒருவரின் இடத்தை காண்பித்து கரிகாலனிடம் ராதாகிருஷ்ணன், நாகஜோதி இருவரும் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கரிகாலன் தன்னுடைய பணத்தை திருப்பி கேட்டார்.

இதில் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், நாகஜோதி ஆகிய இருவரும் பணத்தை தர மறுத்ததோடு அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது பற்றி கரிகாலன் ஆண்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணன், நாகஜோதி ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

இதில் நாகஜோதி தேனி அரசு மருத்துவமனையில் நர்சாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News