செய்திகள்
மழை வேண்டி யாகம் நடத்த ஓபிஎஸ் - இபிஎஸ் உத்தரவு
தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும் என அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தின் தலைநகராம் சென்னையில், இந்தாண்டு கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மழை வேண்டி அனைத்து அமைச்சர்களும் அந்தந்த மாவட்டங்களில் நாளை யாகம் வளர்க்க அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள கோயில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும். இந்த யாகங்களில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும். கோயில்களில் நாளை நடைபெறும் யாகத்தில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
குடிநீர் பிரச்சனை தொடர்பாக தி.மு.க. நாளை போராட்டம் நடத்தவுள்ள நிலையில், யாகம் வளர்க்க அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.