பைக் மீது லாரி மோதல்- கணவன் கண் முன் மனைவி துடிதுடித்து பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள சீலப்பாடி அழகிரி கவுண்டனூரைச் சேர்ந்தவர் அக்பர். இவர் பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பைசா பேகம் (வயது 47). இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது கணவர் அக்பருடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டு இருந்தார்.
தாடிக்கொம்பு அருகே கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது. அப்போது பின்னால் வந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது.
இதில் அக்பர் சாலையோரம் தவறி விழுந்தார். லாரியின் சக்கரத்தில் சிக்கிய பைசா பேகம் சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை பார்த்ததும் அக்பர் கதறி அழுதார். விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லார டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.