செய்திகள்
குடவாசல் அருகே விவசாயிக்கு கத்திக்குத்து
குடவாசல் அருகே வீட்டு முன்பு சத்தம்போட்டு கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்ட விவசாயியை கத்தியால் குத்திய 3 பேர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ் (வயது 30). சம்பவத்தன்று இவரது வீட்டு வாசல் அருகே அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், அன்பழகன், அறிவழகன் ஆகியோர் சத்தம்போட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சங்கர்கணேஷ், வீட்டு வாசல் முன்பு ஏன் சத்தம் போட்டு கொண்டு இருக்கிறீர்கள்? என்று தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் திடீரென கத்தியால் சங்கர் கணேசை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.