செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றுக்குள் பிணமாக தொங்கிய வேன் டிரைவர் - கொலை செய்யப்பட்டாரா?

Published On 2019-06-17 09:23 GMT   |   Update On 2019-06-17 09:23 GMT
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் வேன் டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநாவலூர்:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 25). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அய்யனார் வேன் டிரைவராக இருந்தார். நேற்று காலை அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். மாலை அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த உறவினர்கள் அவரை தேடினர். எங்கும் காணவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் உள்ள கல்லில் கட்டப்பட்ட கயிற்றில் அய்யனார் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இதுகுறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால், குணசேகரன், ஏட்டு செந்தமிழ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு உள்ள கிணற்றில் தூக்கில் தொங்கிய அய்யனாரின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேன் டிரைவர் அய்யனார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்து பிணத்தை கிணற்றில் உள்ள கல்லில் கட்டி தொங்க விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் வேன் டிரைவர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News