செய்திகள்

நாகர். அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவன் பலி

Published On 2019-06-15 09:00 GMT   |   Update On 2019-06-15 09:00 GMT
நாகர்கோவிலில் அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

பூதப்பாண்டி ஞாலம் பகுதியை சேர்ந்தவர் ஜெபர்சன் (வயது 19). டிப்ளமோ இறுதி ஆண்டு படித்துவந்தார்.

இவரது உறவினர் அஜின் (16). இவர் நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை அழைத்துச் செல்வதற்காக நேற்று மாலை ஜெபர்சன் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு வந்தார்.

பின்னர் அஜினை அழைத்துக் கொண்டு இருவரும் வீட்டிற்கு புறப்பட்டனர். டதி பள்ளி சந்திப்பில் இருந்து வடசேரி நோக்கிசென்றபோது அரசு பஸ் ஒன்றை ஜெபர்சன் முந்திச் செல்ல முயன்றார். குறுகலான சாலை என்பதால் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பஸ் மீது மோதியது.

ஜெபர்சன், அஜின் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஜெபர்சன் பஸ் சக்கரத்தின் அடியில் சிக்கினார். இதில் தலை நசுங்கி ஜெபர்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அஜின் ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் எஸ்.டி.மங்காட்டை சேர்ந்த அனில்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து நடந்த டதி பள்ளி பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. ஏற்கனவே அந்த பகுதியில் நடந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உள்ளனர். விபத்துக்கு அந்த பகுதியில் ரோடு குறுகலான சாலை என்பதே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் அந்த சாலையில் ஒருசில பகுதிகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதை உடனே சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Tags:    

Similar News