பெரியபாளையம் அருகே மின்கோபுரத்தில் இருந்து விழுந்து ஊழியர் பலி
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள அனுப்பம்பட்டில் இருந்து தேர்வாய் சிப்காட் தொழிற்சாலை பகுதிக்கு மின் பாதை அமைக்க மின் கோபுரங்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளன.
இந்த மின்வாரிய கோபுரத்தில் மின் வயர்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், பெரியபாளையம் அருகே அக்கரபாக்கம் கிராமத்தில் ஏரியில் உள்ள கோபுரத்தில் மின்சார வயர் அமைக்கும் பணி நடை பெற்றது.
இதில் கும்மிடிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த காளத்தி தெரு சிவப்பிரகாசம் (வயது 50) என்பவர் கோபுரத்தின் மீது மின் ஒயர்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பலியான சிவப்பிரகாசத்துக்கு சர்மிளா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இதுகுறித்து பெரிய பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.