செய்திகள்

முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த எலக்ட்ரீசியன்

Published On 2019-06-12 15:20 GMT   |   Update On 2019-06-12 15:20 GMT
சூலூர் அருகே முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த எலக்ட்ரீசியன் குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஏ. காளியாமுத்தூரை சேர்ந்தவர் சாந்தி (வயது 23). இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கும் சூலூர் அருகே உள்ள செஞ்சேரி புதூரை சேர்ந்த தேவராஜ் (37) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் திருமணமான சில நாட்களுக்கு பின்னர் தான் அவருக்கு ஏற்கனவே ரோகிணி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருப்பதும், அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து நான் கேட்டபோது நகை, பணம் கேட்டு வரதட்சணை கொடுமை படுத்தினார்.

எனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆனதை மறைத்து என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய தேவராஜ், இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை சின்னசாமி, தாய் மாராத்தாள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த புகார் கூறியிருந்தார்.

இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News