செய்திகள்

ராஜபாளையத்தில் தொழிலாளி குத்திக்கொலை- நண்பர் கைது

Published On 2019-06-10 11:22 GMT   |   Update On 2019-06-10 11:22 GMT
ராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளியை முன்விரோதத்தில் நண்பரே கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சின்னசுரைக்காய் பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சங்கர் (வயது22). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று வீட்டின் அருகே மர்மமான முறையில் கழுத்து, வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதத்தில் நண்பரே கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சங்கரும், அதே பகுதியைச்சேர்ந்த கருப்பசாமி என்பவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சங்கர் தாக்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின்பேரில் தெற்கு போலீசார் கருப்ப சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, சங்கரை பழிக்குப்பழி வாங்க திட்டமிட்டார். அதன்படி சிறையில் இருந்து வெளியே வந்த கருப்பசாமி நேற்று இரவு அண்ணாநகர் பகுதியில் சங்கரிடம் பிரச்சனை செய்துள்ளார்.

அப்போது வாக்குவாதம் முற்றவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சங்கரின் கழுத்து, வயிற்றில் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு கருப்பசாமி தப்பி உள்ளார்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News