செய்திகள்

பல்லடம் அருகே 50 அடி கிணற்றில் கார் பாய்ந்து 5 பேர் காயம்

Published On 2019-06-09 17:03 GMT   |   Update On 2019-06-09 17:03 GMT
பல்லடம் அருகே கார் நிலை தடுமாறி 50 அடி விவசாய கிணற்றில் பாய்ந்தது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்லடம்:

திருப்பூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சென்ராயன் (வயது 37). அப்பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரும் அவரது மனைவி கவிதா (31), தங்கை சுதா (30) அவரது மகன்கள் நித்தீஷ் (6), தர்‌ஷன் (2) ஆகியோர் சென்ராயனுக்கு சொந்தமான காரில் வத்தலகுண்டில் உள்ள உறவினர் இல்லத்திருமணத்திற்கு சென்று விட்டு நேற்று மதியம் திருப்பூருக்கு புறப்பட்டனர்.

காரை சென்ராயன் ஓட்டினார். திருப்பூர் தாராபுரம் சாலையில் கோயில்பாளையம் பகுதியில் கார் வந்த போது நிலை தடுமாறி சாலையோரம் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த 50 அடி ஆழக் கிணற்றில் கார் பாய்ந்தது.

கிணற்றில் விழுந்து இடிபாடுகளில் சிக்கி காரில் இருந்தவர்கள் அலறி சத்தம்போட்டனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த பார்த்து அவினாசிபாளையம் போலீசார், பல்லடம், மற்றும் திருப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களை கிரேன் உதவியுடன் மீட்டனர்.

லேசான காயத்துடன் உயிர் தப்பிய அவர்களுக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து அவினாசிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News