செய்திகள்

அரியாங்குப்பத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-06-07 13:04 GMT   |   Update On 2019-06-07 13:04 GMT
அரியாங்குப்பத்தில் மகள் திருமணத்துக்கு கணவர் ஏற்பாடு செய்யாததால் வேதனை அடைந்த மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்:

அரியாங்குப்பம் அன்னைஇந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவர் அரியாங்குப்பத்தில் உள்ள டைல்ஸ் கடையில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி சரளா (வயது45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில் 2-வது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்து திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

ஆனால் ராமசாமி திருமண ஏற்பாடுகளில் தீவிரம் காட்டாமல் மெத்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு இதுதொடர்பாக ராமசாமிக்கும் அவரது மனைவி சரளாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த சரளா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் கணவன்-மகள் தூங்கிய பின்னர் நள்ளிரவில் சரளா தூக்குபோட்டு தொங்கினார். திடீரென விழித்தெழுந்த ராமசாமி, மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சரளாவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சரளா பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News