செய்திகள்
மதுரை அருகே விபத்து: கறிக்கடை ஊழியர் பலி
மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் கறிக்கடை ஊழியர் கழுத்தில் கண்ணாடி பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியேந்திரபாபு (வயது 35). இவர் மதுரை கே.புதூர் மண்வளம் மேட்டுத் தெருவில் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் சத்தியேந்திரபாபு வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது காரின் கண்ணாடி உடைந்து பாபுவின் கழுத்தில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பாபு சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக காரை ஓட்டிவந்த ஜோசப் என்பவரிடம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.