செய்திகள்

கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதாக அறிவித்துள்ள நிதின் கட்காரிக்கு சரத்குமார் பாராட்டு

Published On 2019-05-27 20:40 GMT   |   Update On 2019-05-27 20:40 GMT
கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் தனது முதல் வேலை என்று அறிவித்துள்ள நிதின் கட்காரிக்கு சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் கோதாவரி, பெண்ணாறு, கிருஷ்ணா, காவிரி ஆகிய நதிகள் இணைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை மந்திரியாக இருந்த நிதின் கட்காரி கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தார். தற்போது பா.ஜனதா தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைக்க இருப்பதை தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் தனது முதல் வேலை என அவர் டுவிட்டர் மூலம் தெரிவித்து இருப்பது பாராட்டக்கூடியதும், வரவேற்கத்தக்கதும் ஆகும்.

வீணாக கடலுக்கு செல்லும் 1,100 டி.எம்.சி. அளவிலான கோதாவரி நதிநீரை தென்னக மாநிலங்களுக்கு பயன்படும் வகையில் மத்திய அரசு நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த இருப்பதும், குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் அமைக்க இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம், மனிதன் வாழ்வதற்கு தேவையான குடிநீர் என அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் பயன்படும் வகையில் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்த நிதின் கட்காரி அவர்களுக்கு எனது சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News