செய்திகள்

ஈத்தாமொழி அருகே மூதாட்டியிடம் 5½ பவுன் நகை பறிப்பு- மர்மநபர் கைவரிசை

Published On 2019-05-17 17:18 GMT   |   Update On 2019-05-17 17:18 GMT
ஈத்தாமொழி அருகே மூதாட்டியிடம் 5½ பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜாக்கமங்கலம்:

ஈத்தாமொழி அருகே புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஆதிலிங்கம். கூலி தொழிலாளி. இவரது மனைவி காசிதங்கம் (வயது 60).

இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் மட்டும் இவர்களுடன் வசித்து வந்தார். நேற்று உறவினர் திருமணத்திற்காக அவர் சென்றிருந்தார். வீட்டில் காசித் தங்கமும், ஆதிலிங்கமும் இருந்தனர். இரவு காசித்தங்கம் வீட்டிற்கு பின்னால் மாட்டிற்கு தீவனம் வைப்பதற்காக சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் காசித்தங்கத்தின் வாயை பொத்தினார். பின்னர் கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பியோடினார்.

காசித்தங்கம் திருடன், திருடன் என கூச்சலிட்டார். மனைவியின் சத்தம் கேட்டு ஆதிலிங்கம் அங்கு வந்தார். அக்கம், பக்கத்தினரும் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இதுகுறித்து காசித்தங்கம் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காசித்தங்கம் வெளியே செல்வதை நோட்டமிட்டே மர்மநபர் கைவரிசை காட்டி உள்ளார்.

எனவே இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளையனை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News