தஞ்சை அருகே வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்- 5 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த குருங்குளம் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 33). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பாலன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பாலன் அடியாட்களுடன் வல்லத்தில் வசிக்கும் ராஜாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ராஜாவின் சகோதரி சந்திரா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து பாலன் தரப்பினர் சந்திராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த பாலன் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து சந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரது வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இந்த தாக்குதலில் சந்திரா பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் சந்திராவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜா வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாலன், விஜயா, குமார் , குப்பன் மற்றும் சிங்கா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.