செய்திகள்

பாரிமுனை பகுதியில் ஒரேநாளில் 8 இடத்தில் வழிப்பறி - 2 பேர் கைது

Published On 2019-05-07 09:10 GMT   |   Update On 2019-05-07 09:10 GMT
பாரிமுனை பகுதியில் ஒரேநாளில் 8 இடத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

பழைய வண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் சுஜாதா. பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல பாரிமுனை பகுதியில் நடந்து வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சுஜாதாவிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து சுஜாதா ஏழு கிணறு போலீசில் புகார் செய்தார். இதேபோல் அதே நாளில் பாரிமுனை பகுதியில் பல்வேறு இடங்களில் 3 பெண்கள் உள்பட மேலும் 7 பேரிடம் செல்போன்-பண பை பறிப்பு சம்பவம் நடந்து இருந்தது.

இதுபற்றி புகார் தெரிவித்தவர்கள் கொடுத்த அடையாளத்தின்படி இந்த வழிப் பறியில் ஈடுபட்டது ஒரே வாலிபர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

வழிப்பறி சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தது.

இதனை வைத்து வழிப் பறியில் ஈடுபட்ட புளியந்தோப்பை சேர்ந்த மணி என்கிற ஓசை மணி திருவொற்றியூர் அரவிந்தன் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் பாரிமுனை பகுதியில் ஒரே நாளில் 8 இடங்களில் வழிப்பறி செய்ததை ஒப்புக் கொண்டனர்.

மேலும் மெரினா கடற்கரையில் தனியாக அமர்ந்து இருக்கும் காதல் ஜோடிகளை நோட்டமிட்டு கத்தி முனையில் மிரட்டி நகை, பணம், செல்போன்களை தொடர்ந்து பறித்து வந்ததையும் தெரிவித்தனர்

கைதான 2 பேரிடம் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது ஏற்கனவே கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு வேறு எந்தெந்த குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளது என்று இன்ஸ்பெக்டர் தவமணி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News