செய்திகள்
சுரண்டை அருகே வாக்குச்சாவடியில் ரகளை செய்த தொழிலாளி கைது
சுரண்டை அருகே வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து தேர்தல் அலுவலரிடம் தகராறில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள ரெட்டைகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 57) தொழிலாளி. இவர் நேற்று ஓட்டு போடுவதற்காக ரெட்டைகுளம் கிராமத்தில் உள்ள ஒரு துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது அவர் வரிசையில் நிற்காமல் உள்ளே சென்றதால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அதைக் கேட்காமல் அவர் வாக்குச்சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள தேர்தல் அலுவலரிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடமும் தகராறு செய்தார். இது குறித்து சுரண்டை போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வழக்குப்பதிவு செய்து கணபதியை கைது செய்தார்.