செய்திகள்

தஞ்சை அருகே சுயேட்சை வேட்பாளருக்கு பிரசாரம் செய்தவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-04-18 15:10 GMT   |   Update On 2019-04-18 15:10 GMT
தஞ்சை அருகே சுயேட்சை வேட்பாளருக்கு பிரசாரம் செய்த தொண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே காரமணிதோப்பை சேர்ந்தவர் சந்திரஹாசன். இவரது மகன் பூமிநாதன் (வயது 26) விவசாய கூலி தொழிலாளி. இவர் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பொன்.பழனிவேல் என்பவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வந்தார்.

இந்த நிலையில் பூமிநாதனுக்கும், அவருடன் பிரசாரம் செய்ய வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிலர் பூமிநாதனை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பூமிநாதன், சுயேட்சை வேட்பாளர் பொன். பழனிவேல் தம்பி கோவிந்தராஜிடம் இதுபற்றி தெரிவித்து உள்ளார். ஆனால் இது தொடர்பாக அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராததால் கோவிந்தராஜிடமும் பூமிநாதன் வாக்குவாதம் செய்துள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய பூமிநாதன் காரமணிதோப்பு கோவில் திருவிழாவுக்கு வரி வசூல் செய்ய சென்றவர்களுடன் இன்று சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கோவிந்தராஜன் அவரது மனைவி மூக்காயி, மகன் திருலோகசந்திரன் ஆகியோர் பூமிநாதனுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது மூக்காயி ஊர் மக்கள் முன்னிலையில் துடப்பத்தால் பூமிநாதனை அடித்துள்ளார். இதில் அவமானமடைந்த பூமிநாதன் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுப்பற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பூமிநாதன் அண்ணன் அழகர் கொடுத்த புகாரில் , பூமிநாதனை கோவிந்தராஜ், அவரது மனைவி மூக்காயி, மகன் திருலோகசந்திரன் ஆகியோர் தற்கொலைக்கு தூண்டியதாக கூறியுள்ளார்.

சுயேட்சை வேட்பாளருக்கு பிரசாரம் செய்த தொண்டர் தற்கொலை செய்த சம்பவம் ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் போலீசார் பூமிநாதன் மர்மமான முறையில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News