செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் விவசாயி தலை நசுங்கி பலி
கிருஷ்ணகிரி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனபள்ளி அருகே உள்ள மேல்அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி என்பவரது மகன் முருகேசன் (44).
விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சென்னை - கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ள மேம்பாலத்தில் தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி முருகேசன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் முருகேசன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்துவந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் முருகேசன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.