திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
திருவோணம்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சில்லத்தூர் சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பால்சாமி (வயது40). விவசாயி. இவர் இரவு மூவர் சாலையில் இருந்து திருவோணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
திருவோணம் ஆஸ்பத்திரி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த காட்டாத்தி கிராமத்தை சேர்ந்த ரெங்கன் (65) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் ரெங்கன், பால்சாமி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரெங்கன் இறந்தார். பால்சாமி படுகாயத்துடன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பால்சாமியும் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருவோணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.