செய்திகள்

புதுச்சத்திரம் அருகே குடிசை தீப்பற்றி எரிந்ததில் படுகாயம் அடைந்த பெண் பலி

Published On 2019-03-21 18:03 GMT   |   Update On 2019-03-21 18:03 GMT
புதுச்சத்திரம் அருகே குடிசை தீப்பற்றி எரிந்ததில் படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக இறந்தார்.
நாமக்கல்:

புதுச்சத்திரம் அருகே உள்ள மாரநாயக்கனூரை சேர்ந்தவர் அசோகன் (வயது45). விவசாயி. இவரது மனைவி பிரியா (40). இவர் நேற்று முன்தினம் தங்களுக்கு சொந்தமான குடிசையில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது காற்று பலமாக வீசியதால், திடீரென தீ குடிசையில் பற்றிக் கொண்டது. அந்த தீ மளமளவென குடிசை முழுவதும் பரவியது. இதேபோல் அருகில் உள்ள சாத்தம்மாள் (60) என்பவரின் குடிசைக்கும் பரவியது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 2 குடிசையும் எரிந்து சாம்பல் ஆனது.

இதற்கிடையே தீ விபத்தில் சிக்கிய பிரியாவை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா நேற்று காலையில் சிகிச்சை பலன்இன்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அசோகன் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் அருகில் இருந்த ஆட்டுக்கொட்டகையில் கட்டி இருந்த 6 ஆடுகள் செத்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News