செய்திகள்

கம்பம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி

Published On 2019-03-20 11:06 GMT   |   Update On 2019-03-20 11:06 GMT
கம்பம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் அப்பாவு பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி செந்தாமரை செல்வி (40). இவர்கள் இருவரும் கம்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் உள்ள ஓம் சக்தி மன்றத்தில் பொறுப்பாளர்களாக இருந்து வந்தனர்.

நேற்று அந்த மன்றத்தை காலி செய்து விட்டு அங்கிருந்த பொருட்களை தங்கள் வீட்டுக்கு எடுத்து வந்தனர். நேற்று இரவு 11.30 மணியளவில் பொருட்களை எடுத்து வந்த போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி முருகன் மற்றும் அவரது மனைவி மீது உரசியது.

இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

உத்தமபாளையம் டி.எஸ்.பி. வீரபாண்டி மற்றும் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான முருகன்-செந்தாமரை செல்வி தம்பதியினருக்கு சுந்தரலிங்கம் என்ற மகனும் ராமு பிரியா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

Tags:    

Similar News