பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
கரூர்:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து கரூர் மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜீவானந்தம், ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொள்ளாச்சியில் மாணவிகள், இளம் பெண்கள் மீது பாலியல் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றிய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என விசாரித்து அவர்கள் மீதும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகார பின்னணியில் உள்ளவர்களை காவல்துறை தப்பிக்க விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதில் ராஜாமுகம்மது, காதர்பாட்ஷா, நிர்மல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்து மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் சுப்ரமணி, மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pollachiissue