ஏம்பலத்தில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் வியாபாரி பலி
புதுச்சேரி:
மடுகரை பெரியகாலனி ராம்ஜி நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் ஜெகன் (வயது34), வியாபாரி. இவர் நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
ஏம்பலம் ரோட்டில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் ஜெகனை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி ஜெகன் இறந்து போனார். இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பில்டர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே அரியூர் பாரதிநகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சுலோசனா (வயது51). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று சுலோசனா வெளியே சென்று விட்டு அங்குள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுலோசனா மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சுலோசனா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews