செய்திகள்

நாகர்கோவிலுக்கு ராகுல்காந்தி 13-ந் தேதி வருகை

Published On 2019-03-11 03:28 GMT   |   Update On 2019-03-11 03:28 GMT
நாகர்கோவிலுக்கு 13-ந் தேதி ராகுல்காந்தி வருகிறார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். #Parliamentelection #RahulGandhi
கன்னியாகுமரி:

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி 13-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவிலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்கிவைக்கிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை நடத்த நாகர்கோவிலில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. குமரி மாவட்டம் வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நடத்தலாம் என்று முடிவு செய்தனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று நாகர்கோவில் வந்து ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர். விழா மேடை அமைக்கப்பட உள்ள இடம், பொதுமக்கள் வரும் வழி, ராகுல்காந்தி ஹெலிகாப்டர் இறங்கும் இடம் உள்ளிட்டவற்றை அந்த குழுவினர் பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் டெல்லியில் இருந்து வந்த சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள், விழா மேடையை எந்த வடிவில் அமைப்பது? ராகுல்காந்தி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி மேடைக்கு வரும் வழியை அலங்கரிப்பது தொடர்பாக ஆலோசித்தனர்.  #Parliamentelection #RahulGandhi
Tags:    

Similar News