செய்திகள்

தஞ்சையில் பெட்ரோல் பங்க் சூறை - வாலிபர் கைது

Published On 2019-03-05 12:13 GMT   |   Update On 2019-03-05 12:13 GMT
தஞ்சையில் பெட்ரோல் பங்க் சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பு (வயது 34). இவர் ரகுமான் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில்  டிரைவராக  வேலை பார்க்கிறார். மேலும் அங்கு பெட்ரோல், டீசல் நிரப்பும் பணியிலும் ஈடுபடுவார்.

இந்த நிலையில் அங்கு   மானோஜிப்பட்டி அய்யன் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சந்திரகுமார் (25) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடும் படி  அன்புவிடம் கூறினார். இதையடுத்து அன்பு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்பி விட்டு அதற்கான பணத்தை சந்திரகுமாரிடம் கேட்டார்.  ஆனால் சந்திரகுமார் என்னிடமே பணம் கேட்கிறாயா எனக் கூறி  வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சந்திரகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை எடுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார் . பின்னர் அன்புவை கத்தியால் குத்தினார். பெட்ரோல் பங்க் நிரப்பும் எந்திரம் மற்றும் அங்குள்ள சில பொருட்களை சூறையாடினார்.

இந்த தாக்குதலில் அன்பு பலத்த காயமடைந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அன்பு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News