செய்திகள்

வாழப்பாடி அருகே தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு

Published On 2019-02-14 12:29 GMT   |   Update On 2019-02-14 12:29 GMT
வாழப்பாடி அருகே தீக்குளித்த இளம்பெண் சாவு மாமனார் வீட்டிற்கு செல்லுமாறு பெற்றோர் கூறியதால் சோகம்

சேலம்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி, குரும்பர் தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது மனைவி ரேஷ்மா (24). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சதாம் உசேன் தற்போது சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மாமனார் வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மா வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து அவர் அங்கேயே தங்கி இருந்தார்.

கடந்த 12-ந்தேதி பெற்றோர், ரேஷ்மாவிடம், நீ அதிக நாட்களாக இங்கு தங்கி இருக்காதே, மாமனார் வீட்டில் தங்குவதுதான் நல்லது என்று அறிவுரை கூறியதாக தெரிகிறது.

இதில் மனம் உடைந்த ரேஷ்மா பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து திடீரென உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை ரேஷ்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த ரேஷ்மாவுக்கு திருமணம் நடந்து 3 ஆண்டுகளே ஆவதால் வாழப்பாடி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்த உள்ளார்.

Tags:    

Similar News