வாஜ்பாய் அறிவித்த பட்ஜெட் அருமையாக உள்ளது - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை
நத்தம்:
திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.100 வழங்கினார். ஆனால் அதற்கும் மேலாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.1000 வழங்கியுள்ளார். தற்போது அறிவித்துள்ள வாஜ்பாய் பட்ஜெட் அருமையாக உள்ளது.
இந்த பட்ஜெட் நன்றாக உளளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றுள்ளார். பணம் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் பாதிப்படைய வில்லை. இதனால் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள், 100 ரூபாய் தாள்களை கட்டு கட்டாக வைத்திருந்தவர்கள்தான் பாதிக்கப்பட்டனர். மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த சில நாட்களாகவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டங்களில் சர்ச்சையாக பேசி வருகிறார். தற்போது நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஸ் கோயல் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பெயருக்கு பதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்று பேசியுள்ளார்.
வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில் நடந்த அரசு விழாவில் பேசுகையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லிக்கு போய் உட்கார்ந்து பிரதமர் நரசிம்மராவுடன் பேசுவார் என்று பேசியது அப்போதைய விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதே போல பிரதமர் மோடிக்கு பதிலாக மன்மோகன் சிங் என்றும், பாரத ரத்னா எம்.ஜி.ஆர். என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் எம்.ஜி.ஆர். என்றும் பேசி கட்சியினரை கதி கலங்க வைத்த சம்பவங்களும் நடந்துள்ளது. #DindigulSreenivasan #Budget