செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே விலாசம் கேட்பதுபோல் பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2019-01-23 12:21 GMT   |   Update On 2019-01-23 12:21 GMT
ஒட்டன்சத்திரம் அருகே விலாசம் கேட்பதுபோல் பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து மனைவி செல்லம்மாள் (வயது50). சின்னகரட்டு பட்டி சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த 2 மர்ம நபர்கள் செல்லம்மாளிடம் முகவரி கேட்டனர். அவர் வழி கூறிக்கொண்டிருக்கும் போதே திடீரென செல்லம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போட்டார்.

இருந்த போதும் சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரத்தில் மார்க்கெட் உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்கள் வருகின்றனர். மேலும் வடமாநிலத்தில் இருந்தும் கட்டிட தொழிலுக்கு பணியாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இவர்களில் சிலர் தனியாக உள்ள வீடு மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் பணம், நகைகளை கொள்ளைடித்து விட்டு வெளியூர்களுக்கு தப்பி சென்று விடுகின்றனர்.

இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதியின் வீட்டுக்குள் புகுந்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

மேலும் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஆட்டோ, மோட்டார் சைக்கிள் திருட்டு என குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News