செய்திகள்

கோவை அருகே மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து 27 பவுன் நகை திருட்டு

Published On 2019-01-17 11:37 GMT   |   Update On 2019-01-17 11:37 GMT
கோவை அருகே மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து 27 பவுன் நகையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையம்:

கோவை அருகே உள்ள துடியலூர் லவ்லி நகரை சேர்ந்தவர் கண்ணையன் (80). டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரும், இவரது மனைவியும் வீட்டில் இருந்தனர்.

அப்போது 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தாங்கள் மாநகராட்சி அதிகாரிகள் என கண்ணையனிடம் அறிமுகம் செய்தனர். உங்கள் வீட்டின் தண்ணீர் தொட்டி சுத்தமாக இருக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்கள்.

அதன்படி வீட்டில் இருந்த தொட்டியை சோதனை செய்தனர். பின்னர் மாடியில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டியை சோதனை செய்ய வேண்டும் என்றனர். அவர்களை கண்ணையனும், அவரது மனைவியும் மாடிக்கு அழைத்து சென்றனர்.

தண்ணீர் தொட்டி சுத்தமாக இருக்கிறது என கூறி விட்டு கீழே இறங்கினார்கள். அதன் பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின்னர் கண்ணையனும், அவரது மனைவியும் வீட்டிற்குள் சென்றனர்.

அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த செயின், மோதிரம், கம்மல், வளையல் உள்ளிட்ட 27 பவுன் நகைகளை காணவில்லை.

இதனால் கண்ணையனும் அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரும் மாடிக்கு சென்ற சமயத்தில் மர்ம நபர்களுடன் வந்த வேறு ஒருவர் வீட்டிற்குள் புகுந்து நகையை திருடி சென்று இருக்கலாம் என கண்ணையனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News