திண்டுக்கல் அருகே மாயமான புதுமாப்பிள்ளை மர்ம மரணம்
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள போஜனம் பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). இவர் வேல்வார்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆயில் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கார்த்திகா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற பெருமாள் வீடு திரும்பவில்லை. அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் சுடுகாடு அருகே தனியாக கிடந்தது.
இந்த நிலையில் அதே பகுதியில் ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்த போது இறந்த வாலிபர் பெருமாள் என தெரிவய வந்தது. மேலும் திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பெருமாளின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெருமாள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது சொத்து பிரச்சினையா? காதல் பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலை பொங்கலுக்கு செல்ல வேண்டிய புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.