செய்திகள்

மயிலம் அருகே 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு

Published On 2019-01-04 10:21 GMT   |   Update On 2019-01-04 10:21 GMT
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பு என்கிற சுரேந்தர் (வயது 18). மயிலம் அருகே உள்ள வேங்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் (18).

இவர்கள் 2 பேரும் கள்ள கொளத்தூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை வெளியே சொல்ல கூடாது என அந்த மாணவியை 2 வாலிபர்களும் மிரட்டினர். இதில் பயந்து போன மாணவி இதை பற்றி யாரிடமும் கூறவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி தனக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதாக அவரது பெற்றோரிடம் கூறினார்.

இதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.

இதை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து மாணவியிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.

இது குறித்து மயிலம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் சுப்பு என்கிற சுரேந்தர், ராஜன், ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News