ஆரல்வாய்மொழி அருகே விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 2 பேர் பலி
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் டேனியல். சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் எபிகிப்சன் (வயது 22). டிப்ளமோ என்ஜினீயர்.
அதே பகுதியை சேர்ந்தவர் ஏசுபாதம். இவரது மகன் சலீம்குமார் (23). டிப்ளமோ என்ஜினீயர். நேற்று இரவு அந்த பகுதியில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் எபிகிப்சன், சலீம்குமார் இருவரும் கலந்து கொண்டனர். பின்னர் இரவு எபிகிப்சன் நண்பர் சலீம்குமாருடன் மோட்டார் சைக்கிளில் காவல்கிணறு பகுதிக்கு டீ குடிக்க சென்றார்.
அங்கு டீ குடித்து விட்டு இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் எபிகிப்சனின் கட்டுப் பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. திடீரென ரோட்டோரத்தில் இருந்த உண்டியல் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் எபிகிப்சன், சலிம் குமார் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். எபிகிப்சன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சலீம்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பிணமாக கிடந்த எபிகிப்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சலீம்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சலீம்குமார் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான எபிகிப்சன், சலீம்குமார் ஆகியோர் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்து உள்ளனர்.