செய்திகள்
பாபநாசம் அருகே புதர் மண்டி கிடக்கும் ரேசன் கடை
பாபநாசம் அருகே புதர் மண்டி கிடக்கும் ரேசன் கடையை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் 48. தேவராயன் பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியுடன் இணைந்த கூட்டுறவு அங்காடி தேவராயன்பேட்டை ஊராட்சி புலிமங்களம் கிராமத்தில் செயல்பட்டு வந்தது. அதன் கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியில் போதுமான இடவசதி இல்லாத ஒரு ஓட்டு வீட்டில் அங்காடி செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அத்யாவசிய பொருட்கள் வாங்க வரும் கிராம மக்கள் வரிசையில் நிற்க கூட முடியாத அளவில் இட நெருக்கடியால் சிரமப்பட்டு வருகின்றனர்.
மழை காலங்களில் ரேசன் பொருட்கள் வாங்க வரும் கிராம மக்கள் கடையில் நிற்க இடமில்லாமல் மழையில் நனைந்து கொண்டே ரேசன் பொருட்கள் வாங்கி செல்ல வேண்டிய அவலம் நிலை உள்ளது. பழைய பொதுவியோக கட்டிடம் இடியும் நிலையில் பயன்பாடு இல்லாமல் புல் பூண்டுகள் மண்டிய நிலையில் உள்ளன. எனவே அதனை இடித்து விட்டு அங்கு புதிய கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.