செய்திகள்

நம்மை வெல்ல யாரும் இல்லை, வெல்ல இனி எவரும் பிறக்கப்போவதும் இல்லை- கரூரில் முக ஸ்டாலின் பேச்சு

Published On 2018-12-27 12:48 GMT   |   Update On 2018-12-27 12:49 GMT
நம்மை வெல்ல யாரும் இல்லை, வெல்ல இனி எவரும் பிறக்கப்போவதும் இல்லை என கரூரில் நடந்த விழாவில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 14-ந்தேதி சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து திமுக-வில் தன்னை இணைத்து கொண்டார்.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் திமுக-வில் இணையும் விழா இன்று மாலை 5 மணிக்கு கரூர் திருமாநிலையூரில் இருந்து ராயனூர் செல்லும் வழியில் உள்ள கலைவாணி நகரில் நடந்தது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றார். முக ஸ்டாலின் தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுக-வில் இணைந்தனர்.

இந்த விழாவில் முக ஸ்டாலின் பேசுகையில் ‘‘மக்கள் கூட்டத்தை காணும்போது நம்மை வெல்ல யாரும் இல்லை, எவரும் பிறக்கப்போவதும் இல்லை என்ற உணர்வோடு பார்க்கிறேன். எந்த பொறுப்பில் இருந்தாலும் மக்களின் ஒருவனாக இருந்து கடமையாற்றுவேன்

தாய் தந்தையை விட்டு பிள்ளைகள் பிரியலாம், அவர்கள் மீண்டும் வருவதை பெற்றோர் ஆவலோடு காத்திருப்பார்கள். புதிய இயக்கத்தில் இணைந்ததாக பார்க்கவில்லை, ஏற்கனவே இருந்த கட்சிக்கு வந்திருக்கிறீர்கள். நல்ல பிள்ளைகளாக உங்களை திமுக-வில் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தாமதமாக வந்தாலும் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள்.

ஜனநாயக போர்க்களத்தில்தான் நமக்கு நிறைய பணிகள் உள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கத்தான் போகிறது’’  என்றார்.
Tags:    

Similar News