செய்திகள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் வாலிபர் குத்திக்கொலை - 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-12-20 10:17 GMT   |   Update On 2018-12-20 10:17 GMT
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் மகாராஜன் (வயது21). கட்டிட வேலை செய்து வந்த இவர், இரவு நேரங்களில் தூத்துக்குடி மீன்பிடி துறை முகத்தில் கூலி வேலையும் பார்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் வாலிபர் மகாராஜன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து மகாராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொன்றார்கள்? என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதற்கட்ட விசாரணையில் மகாராஜனுக்கும், தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த கிரேஸ்வன், புதுத்தெருவை சேர்ந்த கிப்டன் உள்ளிட்ட 3 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. ஆகவே அந்த விவகாரத்தில் மகாராஜன் கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்தது. நேற்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு மகாராஜன் வழக்கம் போல் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கும், கிரேஸ்வன் உள்ளிட்ட 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மகாராஜனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

பின்பு அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர். தலைமறைவாக உள்ள கிரேஸ்வன் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மகாராஜனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 1½ ஆண்டே ஆகிறது. #tamilnews
Tags:    

Similar News