செய்திகள்

ராஜபாளையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - 3 பேரிடம் விசாரணை

Published On 2018-12-18 09:50 GMT   |   Update On 2018-12-18 09:50 GMT
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சந்தேகத்தின்பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் பி.எஸ்.கே.நகர் பஸ் நிறுத்தம் அருகில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கடப்பாரையால் எந்திரத்தை உடைக்க முயன்றது. அரைமணி நேரத்திற்குமேல் போராடியும் அவர்களால் உடைக்க முடியவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியில் ஆட்கள் வருவதை உணர்ந்த கும்பல் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு பாதியிலேயே தப்பியது

இன்று காலை ஏ.டி.எம். எந்திரம் சேதம் அடைந்து இருப்பதை கண்ட மக்கள் வங்கி அதிகாரிகளுக்கும், ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், ராஜாமணி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்

இந்த நிலையில் போலீசார் ராஜபாளையம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கடப்பாரை மற்றும் ஆயுதங்களுடன் 3 பேர் சிக்கினர். இவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்றவர்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News